Sunday, May 8, 2011

அன்னையர் தினம் உருவான வரலாறு.

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் இணையத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை படிக்கும் போது அவற்றுக்கு சமனாக இந்த நாளை கட்டாயம் கொண்டாடத் தான் வேண்டுமா என்ற ஏளனங்களும், கிண்டல்களும் கலந்த பின்னூட்டங்களும் கருத்துப் பகிர்வுகளையும் படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம் மனது வேதனைப்படும்.

ஒவ்வொரு நிகழ்வுகளும் வரலாறு ஆகாது..ஆனால் சில விஷேஷமான குறிப்பிட்ட நிகழ்வுகள் சம்பிரதாயங்களாக - ஏதோ ஒரு வரலாற்றின் சுவடுகளாகத் தான் எம்மோடு கூடவே வருகின்றன. அதே போல் அன்னையர் தினத்துக்கென்றும் பல காரணங்களும் வரலாறும் பண்டை காலந்தொட்டு இருக்கத் தான் செய்கின்றது. அந்த வரலாறுகளைப் பற்றித் தெரியாதவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.....!!

பண்டைக் காலங்களில் அன்னையர் தினம் என்பது பெண்கடவுள்களை அம்மாவாக போற்றிக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. உலகில் தோன்றிய எல்லா மதத்திலும் பெண் கடவுள் இன்றியமையாத ஒரு படைப்பாகியிருந்திருக்கிறது. ஏன் நமது இந்து சமயமே அதற்கு பெரிய ஒரு உதாரணமாக கொள்ளலாமே...இயற்கையையும், அனோமதேய சக்தியையும் பெண்ணின் வடிவாக போற்றியிருப்பது கண்கூடான விசயங்கள் . நதியிலிருந்து விதி மகள் வரை பெண்னின் வடிவம். பெண்ணைப் பெரும்பாலும் தாயின் வடிவாகவே போற்றினர்.

உலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம்.

இந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான ஐஸிஸ் (mother of hours) இயற்கை அன்னையாக போற்றப்பட்ட தெய்வமாகும். இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் , நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும்.

இந்த பெண் தெய்வத்தினை போற்றும் விழாவே உலகின் முதலாவது அன்னையர் தினமாக கொள்ளலாமாம். இந்த எகிப்து தெய்வமானது பின்னாளின் ரோமானியரின் சமயத்திலும் , கிறிஸ்தவர்களின் பகானிஸிதத்திலும் கூட வணங்கப்படுபவளாக இருந்திருக்கிறதாம்.


இந்த எகிப்திய பெண் தெய்வமான ஐஸிஸுக்கான விழாவை ரோமானியர்களும் கொண்டாடினர். பின்னாளில் ரோமானியர்களின் பிரத்தியேக தெய்வமான ஸீஸஸ் (Zeus) உட்பட பல தெய்வங்களுக்கும் சிரேஷ்ட தாயாக வணங்கப்பட்ட ரெஹா (Rhea) என்ற பெண் தெய்வத்தை அன்னையர் தினமாக மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாடி வந்தார்களாம். இந்தக் கொண்டாட்டம் வருடத்தின் சம இரவு நாளில் தான் தொடங்குமாம்.

இதே போல் கிரேக்கத்தின் பல பெண் தெய்வங்களுக்கும், ஆசியாவின் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. நாகரீக முன்னேற்றமும் , மனிதப்பரம்பலின் விரிவும் தெய்வ வழிபாடுகளிலிருந்த இந்த பெண் தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் உருவெடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்னாளில் பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்பட்ட அன்னையர் தினம் முதன் முதலாக மானுடத் தாய்மாருக்காக பரிமாணமெடுத்தது ஐரோப்பாவில் என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பெருநாளுக்காக 40 நாட்கள் விரதமிருக்கும் கிறிஸ்தவர்கள் அந்த மாதத்தின் 4வது ஞாயிற்றுக் கிழமையில் தாம் ஞானஸ்தானம் பெற்ற தேவாலயம் (mother church) சென்று வழிபாடுகள் நடத்துவார்களாம். அந்த தேவாலயஙளில் தேவமாதாவுக்கு இவர்களின் பரிசுகளாக சமர்ப்பிக்கப்படும் நகைளும் மலர்களும் வேறு பல பரிசுப் பொருளளும் லும் அந்நாட்களில் நிரம்பியிருக்குமாம்.

1600 களில் தான் இந்த உண்மையான அன்னையர் தினத்தை தம்மைப் பெற்றவளுக்காக ஒதுக்கினார்களாம் ஐரோப்பியர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேலையாட்களுக்கு மே மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையை தமது தாய்மாருடன் சென்று கழிக்க அனுமதி வழங்கப்படுமாம். ம். தாயை சந்திக்கச் செல்லும் வேலையாட்கள் அவளுக்காக மலர்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள், மற்றும் தத்தமது வசதிக்கேற்ப பரிசுப் பொருட்களுடன் போய் தத்தமது தாய்மாரை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதை அப்போது மதரிங் சண்டே (mothering sunday) என்று அழைக்கப்பட்டதாம்.

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக் கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலும் அவர்களால் ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.

முதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (Julia Ward Howe) என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த பேரழிவும் ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது. ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல் கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.





Arise, then, women of this day!
Arise all women who have hearts,
Whether your baptism be that of water or of tears
Say firmly:

"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands shall not come to us reeking of carnage,
For caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of
charity, mercy and patience.

"We women of one country
Will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."

From the bosom of the devastated earth a voice goes up with
Our own. It says, "Disarm, Disarm!"
The sword of murder is not the balance of justice!
Blood does not wipe out dishonor
Nor violence indicate possession.
As men have of ten forsaken the plow and the anvil at the summons of war.

Let women now leave all that may be left of home
For a great and earnest day of counsel.

Let them meet first, as women, to bewail and commemorate the dead.

Let them then solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.

In the name of womanhood and humanity, I earnestly ask
That a general congress of women without limit of nationality
May be appointed and held at some place deemed most convenient
And at the earliest period consistent with its objects
To promote the alliance of the different nationalities,
The amicable settlement of international questions.
The great and general interests of peace.


அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் திகதியைத் தான் அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று விரும்பினார். ஆனால் ஜூன் 2ம் திகதி யை வட அமெரிக்க மகளிர் சங்கங்கள் புதிய அன்னையர் தினமாக 1873ம் ஆண்டு பிரகடனம் செய்தன. அன்னையர் தின கொண்டாட்டங்களுக்காக ஜூலியா தான் நிதியுதவி செய்தார். அவர் இறந்த பின்னும் போஸ்டன் நகரில் 10 வருடங்கள் கொண்டாடினார்கள். அதன் பின் அந்த அன்னையர் தினக் கொண்டாட்டமும் இடை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த அன்னை எடுத்த முயற்சி குறைந்த ஆயுளுடன் முடிந்துவிட்டாலும் அவர் அன்றைக்கு வித்திட்டது தான் இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினத்துக்கு வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அன்னையர் தினத்துக்கான அவருடைய நோக்கம் போற்றப்பட வேண்டியது. சமூக அக்கறையின் அடையாளமாக அன்னையர் தினம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பியது போற்றப்பட வேண்டியது.

பின்னாளில் அனா ரிவீஸ் ஜார்விஸ் ( Anna Reeves Jarvis) என்ற பெண்மணி தான் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா மகளிர் அமைப்பின் மூலம் ஜூலியா வார்ட் ஹோவின் அன்னையர் தின த்தை தத்தெடுத்து நடாத்த விரும்பினார். சிவில் யுத்தத்தால் பிரிந்த சொந்தங்களை ஒன்று சேர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை உபயோகிக்க அவர் விளைந்தார்.

அனா தன் மகளுடன் இரவு நேரப் பிராத்தனைகளின் போதெல்லாம் அன்னையருக்கென்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாகவே வைப்பாராம். அதுவே அவர் மகள் அன்னா மேரி ஜார்விஸ் (Anna Mary. Jarvis ) மனதில் ஆழப்பதிந்து விட்டது.


அன்னா மேரி தன் தாயாரின் மறைவுக்கு பின் உத்தியோகபூர்வமாக அன்னையர் தினத்தை உலகின் அமைதிக்காகவும் அன்னையரை பெருமைப்படுத்தும் முகமாகவும் நாட்டின் தேசிய நாட்களில் ஒன்றாக தேர்வு செய்ய வேண்டுமென்ற பிரேரணையை நிறைவேற்ற விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினார்.. அன்னா மேரி அவர்கள் தனது தாயார் 20 வருடங்களுக்கும் மேலாக ஞாயிற்றுக் கிழமைகளின் வேத பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றிய வெஸ்ட் வேர்ஜினியாவிலிருக்கும் ஆண்ட்ரூஸ் மெதடிஸ் சர்ச் நடத்துனரிடம் தனது விண்ணப்பத்தை முதலில் கையளித்தார். அவரது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ள உத்தியோகபூர்வமாக மே மாதம் 10ம் திகதி வெஸ்ட் வேர்ஜினியா ஆண்ட்ரூஸ் மெதடிஸ் தேவாலயத்திலும் பிலடெல்பியா பென்ஸில்வேனியாவில் ஒரு தேவாலயத்திலும் அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்கள். அன்று அந்த விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு தாய்மாருக்கும் தனது தாயாருக்கு பிடித்த வெள்ளை நிற கார்னெஷன் மலரில் இவ்விரண்டு மலர்களை கொடுத்தார். அன்றிலிருந்து தொடங்கியது தான் ஒவ்வொரு அன்னையர் தினத்துக்கும் கார்னேஷன் மலர்களை அம்மாக்களுக்கு கொடுக்கும் சம்பிரதாயம். அதன் பின் உயிருடன் இருக்கும் அன்னையருக்கு பிங் அல்லது சிவப்பு நிற கார்னேஷனையும், மறைந்து போன தாய்மாரின் சமாதிகளில் வெள்ளை நிறக் கார்னேஷன் மலரையும் சமர்ப்பிக்கும் சம்பிரதாமாகியது.

1908 ஆம் ஆண்டில் நெபரஸ்கா நகரின் அமெரிக்க செனட்ரான எல்மர் பர்கெட் (Elmer Burkett) என்பவர் அன்னையர் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கும்படி வை.எம்.சி.ஏ வைத்த கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் 1909 ஆம் ஆண்டு 46 மாநிலங்களிலும் கனடா, மெக்ஸிக்கோ நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

அன்னா மேரி ஜார்விஸ் தனது வேலையை இராஜினாம செய்து விட்டு முழுமூச்சுடன் அன்னையர் தினத்தை உத்தியோக பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கும் படி அரசை வற்புறுத்துவதை தனது கடமையாக்கிக் கொண்டு பல தொண்டு நிறுவனங்களையும் , வியாபார தலைகளையும், மகளிர் அமைப்புகளையும், தேவாலயங்களையும் தனது முயற்சிக்கு ஆதரவு கேட்டு அலைந்தார்.
ஈற்றில் உலக தேவபாடசாலை அமைப்பினை தனது கோரிக்கைக்கு இணங்க வைத்தார்...அதன் மூலம் 1912ம் ஆண்டில் அமெரிக்கா காங்கிரஸ் வெஸ்ட் வெர்ஜினியா மாநிலம் உத்தியோக பூர்வமான அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1912ம் ஆண்டு அமெரிககவின் 28வது ஜனாதிபதியான வூட்ரோ வில்ஸான் (Woodrow Wilson) தேசிய அளவில் அன்னையர் தினத்தை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்ற பிரேரணையில் கைச் சாத்திட்டார்..

அதன் பின் அன்னையர் தினம் நாட்டின் மிகப் பிரபலமான தினமாகியது. படிப்படியாக வியாபாரரீதியில் அன்னையர் தினம் பெருமளவில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் ஒரு கமர்ஷியல் நாளாக மாறியது. இந்த மாற்றம் அன்னையர் தினத்தின் உண்மையான நோக்கை பங்கமாக்குவதாக அன்னா மேரி கருதினார். அதை அவர் எதிர்க்கவும் செய்தார். சமூக அக்கறையோடு உலகின் அமைதியைதையும், தாய்மையையும் மேன்மைப்படுத்தும் தினமாக அமைய வேண்டிய தினம் வெறுமனே பரிசுப் பொருட்களை வாங்கி கையளிப்பதோடு முடிந்துவிடுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதனால் 1930m aandin அன்னையர் தினத்தன்று கார்னேஷன் மலர்கள் விற்கும் இடத்தில் தனது ஆட்சேபணையை எதிர்ப்பாக காட்ட முற்பட்ட போது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் இன்று ஒவ்வொருவரும் தமது அன்னையரை போற்றும் தினமாக அன்னையர் தினத்தை போராடிப் பெற்றுத் தந்த அன்னா மேரி ஜார்வஸ் தன்னை நினைக்க வென்று ஒரு வாரிசேயில்லாமல் , பார்வையிழந்தவராக , பரம ஏழையாக 1948ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருக்கே தெரியாமல் இருந்த ஒரு விசயம் அவருடைய கடைசிக் காலங்களில் மலர் வியாபார நிலையம் ஒன்று தான் அவருக்கான செலவுகளை கவனித்து வந்தது என்பதை..

அவர் மறைந்தாலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தினம் இன்று 40க்கும் மேலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

glitter-graphics.com

Monday, August 23, 2010

காற்றோடு கலந்த நட்புக்கு கண்ணீர் அஞ்சலி!



மிகவும் துயரமான செய்தியுடன் இன்றைய என் பொழுது விடிந்திருக்கிறது.

ஆர்குட்டிலும், முகநூலிலும் எனது நண்பர் ; பாஸிட்டிவ் அந்தோணி முத்து அவர்களின் மறைவுச் செய்தி கொஞ்ச நிமிடங்கள் அப்படியே கட்டிப் போட்டுவிட்டது!!

ஜப்பார் ஐயாவும் , என்.சுரேஷ் அவர்களும் அவரைப் பற்றி முத்தமிழ் மடலாடற் குழுமத்தில் எழுதியவற்றை படித்த போது தான் அவரைப் பற்றி முதல் முதலாக அறிந்தேன். படித்த அந்தக் கணமே அவர் மீது ஒரு அலாதி பிரியமும் , மதிப்பும் உருவாகிவிட்டது. பின் அவருடைய வலைப்பூக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

http://mindpower1983.blogspot.com/

http://positiveanthonytamil.blogspot.com/

அதன் பின் அவரை ஆர்குட்டில் தேடிப் பிடித்து நானாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். நானாக நட்பு தேடிப் போன சிலரில் இவரும் ஒருவர்.

அவருடைய தன்னம்பிக்கையும் , வைராக்கியமும், மற்றவர்கள் மீதான பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பும் தான் அவர் மீது மதிப்பும், அன்பும் அதிகரிக்க காரணமாக இருந்தது. இயந்திரமயமான வாழ்கை வட்டத்தில் அவருக்கும் எமக்குமிடையேயான கடிதத் தொடர்புகளை விரல் விட்டு எண்ணலாம். ஆனால் அவருடைய எல்லா மடல்களிலும் ஒவ்வொரு வரிகளும் முழு அன்பையும் தோய்த்தெடுத்து வார்த்தெடுக்கப்பட்டவையாக, எமக்கான அவருடைய பிராத்தனையாக, வாழ்த்துகளாக இருக்கும்...! கடைசியாக புனித வெள்ளிக்கு பிராத்தனைச்செய்தி அனுப்பியிருந்தார். :(

கொஞ்ச நாளாகவே அவரிடமிருந்து மடல்கள் எதுவுமில்லை என்பதைக் கூட சில நாட்களுக்கு முன் தான் உறைத்தது; ஆனாலும் அவரை நலம் விசாரித்து ஒரிரு வார்த்தைகளில் எழுத வேண்டிய மடலை இன்றைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டு வந்த என்னுடைய சோம்பல் இப்போது அவருக்கான கண்ணீர் அஞ்சலியாக இதை எழுது வைத்ததை நினைக்க ஆத்திரமாக இருக்கிறது.

சந்திக்க விரும்பி சந்திக்க முடியாமல் போகும் உறவுகளும் நட்புகளுக்குமான பட்டியல் நீண்டு கொண்டே போவதை பார்க்கும் போது வாழ்கையையிட்ட பீதி இன்னமும் அதிகமாகிறது.

எதிலும் பாஸிட்டிவ்வாகவே இருந்த ஒரு தன்னம்பிக்கை நிறைந்த ஆத்மா இன்று அமைதி கொண்டிருக்கிறது. வலியில்லாமல், கவலையில்லாமல் காற்றோடு காற்றாகிவிட்ட ஒரு நல்ல நட்புக்கு எமது கண்ணீர் அஞ்சலியை தவிர வேறு எதை அர்ப்பணிக்க முடியும்?? :(:(

அன்புடன்

சிநேகன் & சுவாதி


Sunday, September 13, 2009

பிரிவுகளுக்கான நிச்சயத்துடன் சந்திப்புகள்!

குழுமங்களில் சந்திக்கும் எல்லோரையும் அவ்வளவு இலேசில் உறவு முறை சொல்லி அழைத்து விட மனது வராது. ஆனால் மனதார அண்ணா என்று நான் விரும்பி அழைக்கும் மூவரில் மூத்தவர் சங்கரண்ணா.. ! முத்தமிழ் குழுமத்தில் பூவை நீ மெல்லியலே..என்ற கவிதைத் தொடரில் நானும் அவரும் உண்மையிலேயே அண்ணா தங்கையாக உருவகித்து தான் கவிதைப் போர் புரிந்திருக்கிறோம். எங்களுடைய அந்த கவிதைக்கு கவிதை எழுதும் போரால் ஏதோ ஒரு வழியில் போக வேண்டிய கதை வேறு வழியில் திரும்பி பயணப்பட்டுப் போனது அத்தனை சுவாரஸ்யம். அந்தக் கவிதைத் தொடரில் அவருடைய தங்கையாக அருக்காணி என்ற பெயர் என் பாத்திரத்துக்கு.. இன்றை வரைக்கும் அந்த அருக்காணியாகத் தான் அண்ணாவுக்கு நான்...! :)

நாட்டின் எல்லைகளுக்கப்பால் இருக்கும் நட்புகளைப் பற்றி நினைக்கும் போது வாழ்நாளில் ஒரு தடவையாவது இவர்களை சந்திக்கக் கிடைக்குமா என்ற ஏக்கம் இருக்கும். தொலைவு கொடுக்கும் பயம் அது...! ஒரே நாட்டின் எல்லைகளுக்குள் இருப்பவர்களை எப்போதும் சந்திக்கலாம்..இப்ப என்ன அவசரம் என்ற அசட்டை மனதில் இருக்கும்..


ஆனால் நாங்கள் வசிக்கும் அதே அமெரிக்காவில் இருந்தும் எப்ப அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தவர் என்றால் இவர் ஒருவரைத் தான் இருக்கும். காரணம் இவருடைய தமிழீழ ஆதரவாக இருக்கலாமோ அல்லது அவரது எழுத்தோ அல்லது ஏதோ என்னால் விபரிக்க முடியாத பந்தமோ என்னவோ எனக்கு தெரியவில்லை... ! ஆனால் அவரை சந்தித்த முதல் நாள் இருக்கே...அது எந்த ஒரு நட்புக்கும் சரி உறவுக்கும் சரி முதல் முதலாக சந்திக்கும் நாளாக இருக்கவே தகுதியற்ற நாள்...!

வன்னி அவலங்களில் கொடூரமாக சிதைக்கப்பட்ட , கொல்லப்பட்ட குழந்தைகளினதும், மனிதர்களினதும் படங்களடங்கிய பதாகைகளுடன், மனதில் உக்கிரமும், ஆவேசமும், இயலாமையும், சோகமும் ஒன்றாக கலவையாகிய உணர்வு நிலையில் , ஒரு கொடூரமான குளிர் உறைந்த நாளில், உடல் சுகவீனத்துடன் வந்த கணவரும், குழந்தைகளும் நானும் கவனயீர்ப்பு போராளிகளாக நின்ற நாளில் தனது பங்களிப்பையும் அளிக்க அண்ணாவும் ஒரு போராளியாகவே வந்து நின்ற நாள் அது!!

இத்தனை நாள் சந்திக்க ஆசைப்பட்ட அண்ணாவை முதன் முதல் சந்திக்கிறோமே என்ற சந்தோஷத்தையோ பரபரப்பையோ அனுபவிக்கமுடியாமல் போன நாள் அது!! சந்தித்த அடையாளமாக கூட நின்று ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத சூழலுக்குள் அடங்கி நின்ற நாள் அது!!

ஆனாலும்............

வெள்ளை மாளிகையின் முன்னால் வன்னியில் அவலப்பட்ட ஈழத்தமிழருக்காக ஒன்று கூடிய கிட்டத் தட்ட பத்தாயிரம் தமிழர்கள் மத்தியில் என்னை மட்டும் கண்டு பிடித்து என் முன்னால் வந்து நின்று "சுவாதி" என்று புன்னகைத்து ஒரே தருணத்தில் என்னை திடுக்கிடவும் பிரமிக்கவும் வைத்தது அந்த அன்புள்ளம் !! அந்தத் தருணம் எனக்கு மிகவும் வெகுமதியான நிமிடம் தான்!! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து நிமிடம் நிலைதிருந்திருக்குமா அந்த சந்திப்பு??
ஆனால் ஆயுசுக்கும் நினைவுகளில் நிழலாகத் தொடர்ந்து கொண்டிருக்கப் போகும் பிரமிப்பு அது!!


"தோழி! நான் இப்போது அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இருக்கிறேன். " என்று ஒரு நாள் நிலாரசிகனிடமிருந்து மடல் வந்த போது தான் ஒரே நாளில் எனது தூரத்து உறவில் மாமா முறையானவர் தனது இரண்டு மகன்மரையும் இராணுவத்தின் குண்டுக்கு பலிகொடுத்த செய்தி கிடைத்து துக்கத்தில் இருந்தோம்... நிலாரசிகன் வந்திருக்கிறார் என்று சொன்னதும் எதிர்பார்த்தபடியே சிநேகனிடம் ஒரு மகிழ்ச்சி ரேகையை முகத்தில் பார்த்ததும் அப்பாடா ..நிலாவை சந்திக்க போக வரம் கேட்கலாம் என்று தைரியம் வந்தது. நிலாவின் கவிதைகளை வாசித்து வாசித்து பின்னூட்டமிடாத ரசிகனாக இருந்த சிநேகனுக்கு நிலாவை நேரில் சந்திக்க விருப்பம் இருந்ததில் ஆச்சரியமில்லை. சொன்ன நாள் போய் சந்திக்க முடியாமல், அடுத்த நாள் தான் நிலாவிடம் போக முடிந்தது.

நிறைய பேசவில்லை. ஆனாலும் எப்படியோ ஒரு தடவையாவது சந்திக்கக் கிடைத்ததே என்ற ஆத்ம திருப்தி.

நிலாவுடன் பிலடெல்பியா மாலை குடும்பமாக சுற்றிப் பார்த்தோம். திரும்பும் போது சிநேகன் சொன்னார்" என்னமோ ஒரு சகோதரத்தை விடுதியில் விட்டு விட்டு வாற மாதிரி கவலையா இருக்கு" :(


நிலாவைச் சந்தித்ததைப் பற்றி தானே பதிவு எழுத போவதாக சிநேகன் சொன்னார். "அந்த நிலாவைத் தான் நான் கையைக் குலுக்கினேன்..சுவாதியால..." என்று தலைப்பு வைத்து... மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு பரா எழுதி வைத்திருக்கிறார். இன்னமும் முடிக்கவில்லை.... என்பது வேறு கதை... :):)

ஆனால் என்னால் அந்தச் சந்திப்பையும் அதையும் என்னால் ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(

இந்தமாதிரி ஏதோ ஓரிரு சந்தோசத்தை தவிர அடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளும், கிடைத்த செய்திகளும் என்னுடைய மனநிலையையும், உடல்நிலையையும் மிகவும் பாதித்துக் கொண்டு இருந்த வேளையில் அந்த பயங்கரமான நாள் மே 17ம் திகதி. அத்தனை ஈழத்தமிழர்களையும் போல் நானும் நிலை குலைந்து போன நாள். என்னை நானே தைரியப்படுத்த முடியாமல் கடைசியில் மருத்துவமனையை நாடி ஓடிப் போக வேண்டிய நிலையில் நான் இருந்த போது 13 நாட்களே மீதமிருந்தது அப்துல் ஜப்பார் ஐயா என் வீடு வர............ !

(தொடரும்)






பிரிவுகளுக்கான நிச்சயத்துடன் சந்திப்புகள்!

சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும் போது மனம் உடைந்து போகும். சில சமயம் எதிர்பாராதது நடக்கும் போது மனம் அப்படியே வானத்தில் பறக்கும். இரு முரணான உணர்வுகள். இரண்டையும் இந்த ஒரே உடல் சுமக்கும் மனமோ அல்லது மூளையோ தான் அனுபவிக்கிறது. இந்த இரு அனுபவங்களையும் நான் குழுமங்களில் எழுத தொடங்கியதிலிருந்து அடிக்கடி அனுபவித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

வானத்தில் பறக்கிறமாதிரியான சந்தோஷங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது எனக்குக் கிடைத்தன.. இப்படி அனுபவங்களை எனக்கு வழங்கிய விஜி, சுதன், குமார் ஐயா, ஜப்பார் ஐயா , சிவ சிவா ஐயா & குடும்பத்தினர், சங்கர் அண்ணா & அண்ணி, நிலா & ரிஷி என்ற தொடர் நிகழ்வுகளில் எத்தனையோ நாளாக மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்த ஷைலஜாவைச் சந்திக்கும் நிகழ்வு கடைசியில் நடந்தேறியது இப்போது கூட கனவு போல இருக்கிறது..!!:):)

குழுமங்களில் பரிச்சயமானவர்களில் நான் முதன் முதலில் சந்தித்ததென்றால் என் அன்பான விஜியையும், சுதனையும் தான்.

இரண்டு வருடங்களின் முன் ஒரு கந்தசஷ்டி விரத நாளில் இருவரும் தமது நண்பர்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்தனர். வந்த அத்தனை நண்பர்களும் விருந்து சாப்பாடு சாப்பிட சுதன் கந்த சஷ்டி உபவாசத்தால் பழமும் பாலும் சாப்பிட, விஜி மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டது எனக்கு கொஞ்சம் கவலை தான். :):)

என்னைப் பார்த்ததும் சுதனின் முகத்தில் தெரிந்த உணர்வு..." அட இந்த மூஞ்சியை பார்க்கத் தான் என்னை ஆக்கினைப் படுத்தி இத்தனை தூரம் இழுத்து வந்ததா விஜி??" என்பது போலத் தெரிந்தது... :):) ஆனால்.. எனக்கு விஜியைப் பார்த்ததும் என்னவோ 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு கட்டடித்துவிட்டு டூர் வந்தமாதிரி இருந்தது. சுதன் சூப்பரா அழகா , மேக்கப் இல்லாமலே கதாநாயகனுக்கு கிட்டவா இருந்தார்.

ஒரு நல்ல சந்திப்பு; மனம் விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாடக் கிடைத்த அருமையான ஒரு சந்தர்ப்பம்!! இனி எப்ப இன்னொரு தடவைக்கான சந்திப்பு என்ற ஏக்கத்துடனான பிரிதல்..! நிகழ்வுகளின் நினைவுகளை மனதில் கொடுத்துவிட்டு வாகனத்தில் ஏறும் போது திரும்பிப் பார்த்த விஜியின் முத்திரை குற்றிய புன்னகை.....இன்னமும் மறக்கவில்லை.. !!

ஆனாலும் என்னால் அந்த நிகழ்வை ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(

அதே போல் தான் குமார் ஐயாவுடனான சந்திப்பும்........!!

எந்த இடத்துக்கு பயணப்படவேண்டுமென்றாலும் என் பிராண்நாதரையோ அல்லது தம்பிமாரையோ வாகன உதவிக்காக எதிர் நோக்க வேண்டிய கட்டாயம் எனக்கு...வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தும் லைசன்ஸ் இல்லாத காரணத்தால்..........

அப்படியொரு சூழலில் 2 மாதத்திற்கு முன்னாலேயே குமார் ஐயாவின் மடல் வந்ததும் என் கணவரிடம் சொல்லிவிட்டேன் அன்றைய தினம் அவர் வேலையிடத்தில் லீவு எடுத்துவிட வேண்டுமென்று.... அந்த தினம் நான் மூன்று குழும நண்பர்களை மட்டுமல்ல மேலும் இரண்டு முக்கியமானவர்களை முதன் முதலாக சந்தித்தேன்..!

குமார் ஐயா, சிவ சிவா ஐயா, ரிஷி ஐயா ஆகியோருடன் கலையுணர்வு , கைத்திறமை அத்தனையும் கைவரப் பெற்றவர்களான சிவ சிவா ஐயாவின் அம்மாவையும், அவர் மனைவியையும்.....சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

குசல விசாரிப்புகள், புத்தக பரிமாற்றங்கள், தேநீர், சிற்றுண்டி என்று எல்லாம் குறைவில்லாமல் இருந்தது. என்னுடைய இரண்டு இம்சை அரசர்களும் வாசலில் நுழையும் போதே நான் அஷ்வத்தாமா , நான் தான் அச்சுதன் என்று தாங்களாவே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே போனதிலிருந்து வெளியே வரும் வரை என்னைப் பார்க்கிலும் அதிகமால அவர்கள் தான் குமார் ஐயாவோடும், சிவ சிவா ஐயாவோடும், சிவசிவா ஐயாவின் தாயாருடனும் பேசினார்கள் .




(கொலுவை அலங்கரித்த கைகள் என் குழந்தைகளயும் அரவணைத்துக் கொண்டன.)


இங்கே இருக்கும் வீடுகளில் பேஸ்மெண்ட் என்று பாதாள அறைகள் விஸ்தாரணமானவையாக இருக்கும். அந்த பேச்மெண்ட் முழுவதும் வியாபித்திருந்த அந்தக் கொலுவைக் கண்டதும் அப்படியே வாயடைத்து பிரமித்துப் போனது தான் அந்த சந்திப்பில் எனக்கு மிக முக்கியமானவிடயம்.
இப்படியொரு பிரமாண்டமான விஸ்தாரமான கொலுவை இதற்கு முன் நான் எப்பவும் பார்த்ததில்லை.



















என் குழந்தைகளுக்கும் இது ஒரு புதினம் தான். சிவ சிவா ஐயாவின் அம்மாவை அவர்கள் "அம்மம்மா" என்று தான் அழைத்தார்கள். அம்மம்மா அந்தக் கொலுவில் நிறைய இவர்களுக்கு விருப்பமான ஐட்டங்களாக வைத்திருந்தது எனக்கு உள்ளூர பயமாகவும் இருந்தது..எங்கே இவர்கள் அந்த பொம்மைகளை எடுக்க கொலுவில் கை வைத்துவிடுவார்களோ என்று....
என்னமோ அன்று அவர்கள் வழமையை விட சமர்த்தாக இருந்தார்கள் .. :):)

























கொலுவைப் பற்றி எழுதத் தொடங்கினால் இந்தப் பதிவு எத்தனை நீளத்துக்கு தொடரும் என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு அலங்காரமும் ஒரு கதையையோ அல்லது காட்சியையோ விபரிப்பவையாக இருந்தன. உதாரணத்திற்கு அந்தக் கொலுவில் ஒரு காட்சி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் முருகக் கடவுளின் பிறப்பையும் வளர்ப்பையும் கதையாகச் சொல்லியது.

















(சரவணப் பொய்கை. )


கொலுவில் நூறு ஆண்டுகளைக் கடந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 48 வருட கால பிளாஸ்டிக் பொம்மைகள் கூட இருந்தன. எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்தது அந்தப் பல்லாங்குழி தான். மூன்று தலைமுறைகளாக கை மாறி வந்து கொண்டிருந்த அந்தப் பல்லாங்குழியும், சோழி முத்துகளும் சிவ சிவ ஐயாவின் அம்மாவுக்கு அவருடைய மாமியார் கொடுத்ததாம்.
இதே போல் 108 (என்று தான் நினைக்கிறேன்..) வகையான பிள்ளையார்களுக்கென்று தனியாகப் படிகட்டி அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.

இதே போல் அங்காடித் தெரு, உச்சிப் பிள்ளையார் கோவில், தாஜ்மஹால், மிருகக்காட்சி சாலை, கடற்கரை, கல்யாணக் காட்சி, பாத்திரக் கடை என்று பல நிகழ்வுகளை கலை நயத்துடன் அலங்கரித்து வைத்திருந்தார்கள்.





(சிவ சிவா ஐயாவீட்டுக் கொலுவில் பல்லாங்குழியையும், சரவணப் பொய்கையையும், இன்னும் சில காட்சிகளையும் நான் புகைப்படம் எடுத்த தை விட தம்பி கண்ணபிரான் ரவிசங்கர் எடுத்தவை அழகாக எடுத்திருப்பதால் அவருடைய சில படங்களையே இங்கு போட்டிருக்கிறேன். நன்றி கே.ஆர்.எஸ்).



சிறிது நேரத்தில் சிவ சிவா ஐயாவின் மனைவியாரும் வந்துவிட சபை நன்றாகவே கலகலப்பாக களை கட்டியது.




கடைசியில் விடைபெறும் போது வழமை போலவே... கனமான மனமும், காட்டிக் கொள்ளாத புன்னகையும், விடை சொன்ன வார்த்தைகளும், கையசைப்புமாய்.... அந்த சந்திப்பையும் என்னால் ஒரு பதிவாக எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை.. :(


(தொடரும்.)




Sunday, August 2, 2009

அன்புள்ள தோழி சிவசோதிக்கு!

எல்லோருக்கும் எனது நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!!

"Truth and tears clear the way to a deep and lasting friendship."

வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம்; இந்த ஒரு வாழ்கையிலேயே எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன; எதிர்பாராத திருப்புமுனைகள் வாழ்கையை திசை திருப்பிவிடுகின்றன; புதிது புதிதான அறிமுகங்கள்;சந்திப்புகள், பிரிவுகள், உறவுகள், பிறப்புகள் , மரணங்கள் என்று பலவற்றைப் பார்த்துக் கொண்டு தான் எம்முடைய வாழ்கையின் ஒவ்வொரு மைல் கற்களையும் கடந்து வருகிறோம். இவற்றில் பல விசயங்கள் மறந்து போய் விடுகின்றன, அல்லது முக்கியத்துவமிழந்து விடுகின்றன. சில விசயங்கள் அல்லது மிகச் சிலரே மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றனர். இவற்றில் எத்தனை முயன்றாலும் அழிக்க முடியாத நினைவு பிம்பங்களக மனதில் பதிந்து வேருன்றி விடுவதில் நட்புக்கு இணையாக வேறெதையும் ஒப்பிட முடியாது. அதிலும் பள்ளி நாட்களில் மலர்ந்த நட்புக்கு இணையாக வேறெந்த பிணைப்பும் ஈடாக முடியாது; அந்த நட்பில் கிடைத்த இனிமையும் பசுமையும் கலந்த நினைவுகள் காலகாலத்துக்கும் எம்மைத் தொடர்ந்து வரும் எமது நிழலுக்கொப்பானவை.

பள்ளிப் பருவத்தில் கிடைத்த நட்பை பள்ளி முடிந்து , கல்லூரி நுழைந்து, கல்யாணமாகி, குடும்பஸ்தராகிய பின்னாலும் தொடரமுடியுமெனில் அப்படித் தொடரும் நண்பர்களை தான் மிகுந்த அதிர்ஷட சாலிகள் என்பேன் ; அந்த வகையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள். கல்யாணத்தின் பின்னும் பள்ளிக்கால நண்பர்களை தொடர்பில் வைத்திருப்பதும், சந்திப்பதும் அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரமான விசயங்கள் ; ஆனால் பெண்களின் வாழ்கையில் திருமணம் என்ற திருப்பு முனையின் போது திசை திருப்பப்பட்ட வாழ்கையின் சூழ்நிலைகளும் , வாழ்வியல் அமைப்புகளும் நட்பு பாராட்டும் சாத்தியக் கூறுகளை அரிதாக்கி அல்லது இல்லாமலே போக்கிவிடுகின்றன.

இதுவரை வேரூன்றியிருந்த பிறந்த வீடு என்ற தோட்டத்திலிருந்து ஒரு பெண் தன்னை முழுவதுமாக பிடுங்கி புகுந்த வீடு என்ற புதிய தோட்டத்தில் பதியம் வைக்கும் அந்தக் கணத்தில் தனது மனதுக்குப் பிடித்த பல விசயங்களை அந்த மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டு தான் புது இடத்தில் வேரூன்ற முயற்சிக்கிறாள்.அவள் தனக்குள் சமாதிகளாக புதைத்த ஆத்மாவின் துடிப்புகளில் பெரும்பாலும் அவளுடைய தோழமைகளும் அடக்கமாகிவிடுகின்றன.

என்னுடைய பள்ளி நாட்களில் எனக்கும் ஒரு தோழமை கிடைத்தது; அந்த தோழமையை சுமந்த அந்த சுகமான நாட்களின் நினைவுகள் இப்போது ஏங்கிக் கிடக்கும் மனதுக்கு மருந்தா அல்லது அது தான் ரணமா என்று புரியாத புதிராக இருக்கின்றது. அந்த இனிமையான பள்ளி நாட்கள் இந்தக் கணம் வரை மட்டுமல்ல..என் கடைசி நேர சுவாசத்துளி அடங்கும் போது கூட பசுமையாக இருக்கப் போகும் ஒரு இனிமையான தோழமை அது!! அந்தத் தோழமையை எனக்கு தந்தவள் தான் சிவசோதி!

நட்பு என்ற பிணைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விவரித்து விட முடிவதில்லை. ஆனால் நட்பு என்ற ஒன்றைப் பற்றி எளிமையாக சொல்லச் சொன்னால் நான் உச்சரிப்பது "சிவசோதி "" என்ற வார்த்தையை மட்டும் தான். ஒரு இனிமையான நட்பும் அந்த நட்பைப் பாராட்ட நமது மனமும் உணர்வும் தேர்வு செய்யும் நபரும் மிகவும் விசேசமானவர்கள். அந்த வகையில் என்னுடைய வாழ்கையில் விசேசமானவள் சிவசோதி.

என்னுடைய பள்ளி நாட்களில் எத்தனையோ சிநேகிதிகள் வந்தாலும் சிவசோதிக்கு என் மனதில் கொடுத்திருந்த இடத்தை யாரோடும் என்னால் பகிரமுடியவில்லை.பள்ளியையும் கடந்து எங்கள் வீட்டுக்குள்ளும் நுழைந்து என் குடும்பத்தாரின் மனதிலும் ஒரு பிணைப்பை உருவாக்கிவிட்ட விசேசமான நட்பு அவளுடையது!

சில பல குடும்ப சிக்கல்களை , ரகசியங்களை கூட கலந்து பேசுமளவுக்கு என் அம்மாவை நெருங்கியிருந்தாள்; நான் மட்டுமே அப்பாவுடன் போன இடங்களுக்கு இன்னொரு மகளாக என்னோடு சேர்ந்து அப்பாவுடன் பயணிக்குமளவுக்கு அப்பாவின் அன்புக்கும் பாத்திரமானாள்; என்னைப் போலில்லாமல் சண்டை போடாத ஒரு அக்காவாக என் தம்பிமாரின் இதயங்களிலும் இடம் பிடித்துக் கொண்டாள். அத்தனை லாவகமும் , திறமையும் , உறுதியும் அவளுடைய நட்புக்கு இருந்தது.

ஒரு அன்னிய மனிதர் எமது மனதை நம்மை அறியாமலேயே ஆக்கிரமிப்பதும், உரிமை கொண்டாடுவதும், அக்கறைப்படுவதும், பங்கெடுப்பதும், ஆதரவு காட்டுவதும் ஆதூரமளிப்பதும் என்று சகலவிதமான இதங்களையும் வழங்கும் அந்த உன்னதமான உரிமை அல்லது பிணைப்பை , அந்த வியப்பை நானும் அனுபவித்தேன்... சிவசோதி மூலம்.

அதுவரை வகுப்பில் சேர்ந்து படிக்கும் பக்கத்து இருக்கை மாணவிகளுடனான உரையாடலை மட்டும் தான் சிநேகம் என்று நினைத்திருந்த எனக்கு சிவசோதிக்காக நான் செய்த ஒவ்வொரு உதவிகளும், அவள் எனக்காக மற்றவர்களிடம் காட்டிய வேறுபாடும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது..!

மிகவும் இதமான இனிமையான நட்பை எனக்குள் வியாபிக்க வைத்த அந்த தோழியை நான் இன்று தொலைத்துவிட்டேன். தொலைந்து போன என் நட்பின் முகவரியை கடந்த 26 ஆண்டுகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். ஈழத்தில் இருக்கும் வரை அவளுடனான தொடர்பு கடித வடிவில் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இந்தியா வந்த பின்னாலும் அவளுடனான கடிதத் தொடர்பு இருந்தது... இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் வைத்த சில நாட்களிலேயே வெடித்துவிட்ட யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் அவளிடமிருந்து கடைசியாக ஒரு மடல் வந்தது ... "நானும் அங்க வந்துவிடட்டாடி?? இங்க நிலமை மோசமாகும் போல இருக்கு...தொடர்ந்து படிக்கேலாது போல இருக்கு..அங்க வந்து படிப்பை தொடரலாமா எண்டு விபரம் எழுது "

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் சந்தோசத்தில் வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக் குதித்தேன்..பழையபடி அவளும் நானும் ஒன்றாக திரியலாம் என்ற கனவுகளுடன் பதில் அனுப்பினேன். ஆனால் அதன் பின் இன்று வரை அவளிடமிருந்து எந்த மடலும் இல்லை...! :(

என்னுடைய மடல்கள் குளத்தில் எறிந்த கற்களாய் போனதோ என்னமோ??? அவளுக்கோ அவளுடைய குடும்பத்தினருக்கோ என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு தெரியாது. இத்தனை வருட காலத்தில் அவளைப் பற்றி எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவளுடைய ஊர்க்காரர்கள் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.. அமெரிக்கா வரும் விடயமாக மும்பாய் வந்து நின்ற போது அங்கு அவளுடைய ஊர்க்காரர் ஒருவரை சந்தித்தேன். வழமை போல் அவரிடமும் அவளைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தேன். இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவள் இறந்துவிட்டாள் என்று அவர் சொன்ன போது என் இதயமே பிளந்து விட்டது. ஒரு வார காலமாக அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். ஏதோ சூனியத்தில் தள்ளிவிடப்பட்ட மாதிரி இருந்தது. அப்பாவின் மரணத்தின் பின் நான் அதிகமாக அவளுக்காக தான் அழுதேன். அந்த தடவை அமெரிக்கப் பயணம் சரிவரவில்லை; திரும்ப சென்னைக்கே வந்துவிட்டேன்.

அவள் இல்லை; என்னுடைய தோழிக்கு மரணம் என்ற முடிவு நேர்ந்திருக்கிறது; அதுவும் அவலமான துர்மரணம்; அவளுடைய கடைசி நேரத் துடிப்பு எத்தனை வலிமிகுந்ததாக இருந்ததோ? என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு உயிரை விட்டாளோ ? எப்படியெல்லாம் துடித்தாளோ?? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை; இத்தனை நாளாக இவை எதையும் தெரியும் வாய்ப்புக் கூட இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் என்ற நினைவு தான் மிகவும் வலித்தது. அவளை இன்னொரு தடவை பார்க்கவே முடியாத விதியை சுமந்து கொண்டு தான் இனிமேல் நான் என் வாழ்நாள் முழுக்க திரிய வேண்டுமென்ற நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாகச் சுட்டெரிக்கத் தொடங்கியது.

ஒரு ஆறேழு மாத காலம் இந்த தகிப்புடன் தான் உழன்று கொண்டிருந்தேன். அ்ந்த உறுத்தலுடன் தான் அமெரிக்கா வந்தேன்.. வந்த ஓரிரு மாதங்களில் யாழில் எங்களோடு படித்த அருள் நங்கை என்ற சக மாணவியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. பழைய கால வசந்தங்களையும், பிரிவுகளையும் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் " என்னுடைய தோழி இறக்கவில்லை துப்பாக்கிச் சூட்டில் இறந்தது என் தோழி சிவசோதியின் தங்கை நந்தினி என்றார்.. ! ஆனால் நான் இப்படிக் கேள்விப்பட்டேனே என்றதும் அவரே சந்தேகத்துடன் உதட்டைப் பிதுக்கினார்.. சிவசோதியைப் பற்றிய மேலதிகமான தகவல்களை அருள் நங்கையாலும் எனக்கு தர இயலவில்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்??? என் தோழியா அல்லது அவளுடைய ஒரே ஒரு தங்கையா இறந்தது என்று இன்று வரை எனக்கு தெளிவாகத் தெரியாது.

நட்பின் அருகாமையில்லாத வாழ்கை பல தருணங்களில் நரகத்து முள்ளாக என்னை நெருடியிருக்கிறது. இந்த 26 வருடங்களாக நான் அனுபவித்த மகிழ்ச்சியான நிமிடங்கள், துயரத்தில் துடித்த நாட்கள், சிக்கலில் தவித்த தருணங்கள் என்று பல சூழ்நிலைகளில் அந்த நட்பின் அருகாமையை மனம் ஏக்கத்துடன் தேடியிருக்கிறது. அந்த நேரங்களில் தேவைப்பட்டும் கைவரக் கிடைக்காத அந்த ஏக்கம் , இயலாமை மனதளவில் என்னை எத்தனையோ தடவை தளர்வடைய வைத்திருக்கிறது. அந்த வேதனையின் போதெல்லாம் நினைவில் சிவசோதியின் முகம் தான் துருத்திக் கொண்டு வந்து நிற்கிறது.

அவளும் நானும் கவலைகள் எதுவும் தெரியாமல் குருவிகள் போல் திரிந்த அந்த நாட்களில் ஒரு சின்ன விசயத்தைக் கூட அவளிடம் நான் மறைத்ததில்லை; அவளும் அப்படித் தான். ஆனால் இப்போது எத்தனையோ நிகழ்வுகளுடன் என் வாழ்கை பாதையை நான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன்..அவளிடம் சொல்லவும் பகிரவும் என்னிடம் நிறைய சங்கதிகள் குவிந்து கொண்டிருக்கிறது....அவளிடம் சொல்ல வேண்டியவற்றை அவளிடம் சொல்லாமலே எனது வாழ்கை முடிந்துவிடும் பட்சத்தில் அவளுக்கென்று நான் விட்டுச் செல்லவென்று தான் இந்த கடிதங்களை ஒரு நாள் எழுதத் தொடங்கினேன். அவளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இந்தக் கடிதங்களை தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு நான் ஆசுவாசமாக மூச்சு விடுவேன்.. இல்லையென்றால் அவள் தன்னந்தனியாக இருந்து அவளுக்காக நான் சேகரித்த நினைவுகளை படிக்கட்டும்... எப்படியாயினும் அவளுடைய கையில் அவளிடம் நான் பகிர நினைத்தவை போய் சேர வேண்டும் என்ற வெறியில் என் மனதில் அவளிடம் சொல்ல நினைத்தவை எல்லாவற்றையும் அவ்வப்போது கடித வடிவில் எழுதத் தொடங்கினேன்.

இந்த நிமிடம் வரை என்னுயிர் தோழி உயிருடன் இருக்கிறாளா அல்லது இல்லையா என்ற தகவல் கூடத் தெரியாமல் , அவள் எங்காவது உயிருடன் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன், அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவள் உயிருடன் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் , என்றைக்காவது அவளை சந்திக்காமலா போய்விடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் .....நான் இந்த கடிதங்களை அவளுக்காக அவளை தேடி , எழுதத் தொடங்கினேன். அந்தக் கடிதங்களை வாரத்துக் ஒன்றாக இங்கே பதியப் போகிறேன்.

அவற்றை நான் இங்கு தருவது கூட அவளோ அல்லது அவளைத் தெரிந்த எவரோ படிக்க மாட்டார்களா , படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தில் தான் .....

உங்களில் யாராவது வழியில் ஒரு அழகான ஈழத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய பெயரைக் கேட்க முடிந்தால், அந்தப் பெயர் சிவசோதி என்று இருந்தால்....தயவு செய்து அவளுடைய சிநேகிதி சாந்தகௌரி இன்னமும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லுங்கள்... ஒரு தொலைந்து போன நட்புக்கு மீண்டும் உயிரூட்டிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்க கடவுள் அருள் செய்வாராக!

(தொடரும்)
மீண்டும் எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!