Monday, January 26, 2009

சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை நோன்பும், என் மனநிலையும்...

சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை நோன்பும்,
எமது மனநிலையும்...!!







எப்படியொரு இக்கட்டான மனநிலையில் ஈழத் தமிழர்கள் இருகிறோம் என்று எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. நான் எழுதுவது இதை வாசிப்பவர்களுக்கும் புரியுமோ என்று அச்சமாக இருக்கிறது...


நாள் தோறும் சராசரி 20 அப்பாவித் தமிழ் உயிர்கள் ஈழத்து மண்ணில் சாவில் முடிகின்றன.ஆனால் அண்மைக் காலமாக 100க் கணக்காக உய்ர்ந்திருக்கிறது. அந்த இழப்புகளை, தாங்க முடியாத சோகத்தை எத்தனை சொல்லியும் விளக்க முடியாது. அப்படியொரு நிலையில் அந்த தமிழ் மக்களுக்காக தமது உயிரையும் உடலையும், உடல் நலத்தையும் வருத்தி இப்படி போராடும் இவர்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லி எழுதினால் , என்னுடைய அடுத்த கேள்வி எதை நான் இங்கு வெற்றி என்று குறிப்பிடுகிறேன் என்பது தான். சாகும் வரை உண்ணாவிரதம் என்பது மிகக் கொடுமையான எச்சரிக்கைக் கெடு வேண்டுகோள் விடுத்தவருக்கும், வேண்டுகோள் போய் சேர வேண்டிய உரியவருக்கும்............ !!

இங்கே இந்த இளைஞர்களின் கனவுகளும் இலட்சியங்களும் இவர்களுடைய குடும்பத்தினரின் இவர்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் ஒட்டு மொத்தமாய் இந்த உண்ணாவிரதத்திற்குள் முடக்கப்பட்டு போகிறதே என்று குற்ற உணார்ச்சியும் , வேதனையும் என்னிடம் எப்போதும் ஏற்படும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும் போதும் , உண்ணாநிலையில் உட்காரும் போதும்.

தனக்கில்லாவிட்டாலும் தன் பிள்ளைகள் சாப்பிட வேண்டுமென்று , தன் பிள்ளைகளின் பட்டினியைப் பொறுக்காத பெற்றோருக்கு 3 நாட்களாக தம் மக்கள் பட்டினியோடு கிடப்பதை எப்படி தாங்க முடியும்?

சாகும் வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினால் அதனுடைய வெற்றி 2 வகையில் கிடைக்கும். ஒன்று இவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் போது. இரண்டாவது கோரிக்கை ஏற்க்கப்படாவிட்டால் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கேற்றால் போல் பட்டினியாகக் கிடந்து மரணத்தை வரவேற்பது.

முதலாவது வகை வெற்றி என்பது அரசியல் நாடகங்களாக இருக்கும் வரை கிடைக்கப் போவதில்லை. அப்படியானல் இரண்டாவது வகையான வெற்றியை அவர்களுக்கு கிடைக்க நாங்கள் அனுமதிக்க போவதில்லை. அதில் எங்களுக்கு ஒப்புதலும் இல்லை. அவலமான மரணங்களை நாளுக்கு நாள் பார்த்துக் கொண்டு கையாலாகத நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் எமக்கு தான் தெரியும் ஒவ்வொரு உயிரின் மதிப்பும், முக்கிய்த்துவமும். எத்தனை எத்தனை உயிர்களை பறி கொடுத்துவிட்டோம்? இந்த அவலமான சாவுகளை நிறுத்தச் சொல்லி இன்னொரு மூலையில் எமது தமிழ் உணர்வாளர்கள் தமக்குத் தாமே சாவை வரவேற்பதை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் ஈழத்து தமிழர்கள் யாருமே இல்லை. அதை அனுமதிக்கவும் நாங்கள் தயாராக இல்லை.

ஆக...நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்

சகோதர்களே உண்மையான உணர்வுள்ள நீங்கள் எங்களோடு இருக்க வேண்டியவர்கள்; நீங்கள் நீங்கினால் கடைசியில் ஈழத் தமிழரும் சரி சுய மானமுள்ள எந்த தமிழனும் சரி சுயநலவாதிகளான அரசியல்வாதிகளின் கையில் தான் சிக்கி அழிந்து போவோம். ஆகையால்... வேண்டாம் இந்த விபரீதம். எங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் நிச்சயமாய் வேண்டும். வேறு வகையில் போராடலாம். நீங்கள் சட்டம் பயில்பவர்கள். உங்களால் முடியும் நீதியை எப்படி பெறுவது என்று. அந்த வகையில் முயலுங்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களான

1. கெம்ப குமார்
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்

9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்

12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்


என்ற அத்தனை தொப்புள் கொடி உறவுகளுக்கும் என் தலை தாழ்த்திய வணக்கத்தை தெரிவிக்கிறேன். எங்கள் மண்ணில் விடிவெள்ளி ஒன்று புதிய வானத்தில் பிறக்கும் சரித்திரத்திலும் எங்கள் இதயங்களிலும் உங்கள் அத்தனை பேருக்கும் முக்கிய இடம் உண்டு.

No comments: