Monday, October 20, 2008

எவ்விதம் நன்றி சொல்வேன்..?

இன்று(அக்டோபர் 19ம் திகதி 2008) நியூயோர்க் நேரப்படி காலை 8:30 மணிக்கு தமிழ் பிரவாகத்தின் உறுப்பினர்களில் ஒருவரும், தமிழின உணர்வாளருமான ராயல் சாமுவேல் தொலைபேசியில் அழைத்தார். "அக்கா சன் நியூஸ் பாருங்கள்." என்றார். அப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்ததால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்னவோ ஈழத்தில் பார தூர‌மாக நடந்து அதை சன் டிவியில் காட்டுகிறார்களோ என்று யோசனை வந்தது. அப்ப தான் அட சன் நியூஸ் சானலே எங்களிட்டை இல்லையே...சன் டிவி மட்டும் தானே இருக்கு என்ற நினைவும் வந்தது. சாமுவேலிடம் சொன்னேன். அப்படியா ...சரியக்கா..யஹூ மெசெஞ்ச‌ர் வாங்கோ என்றார். போனேன்.


"இராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினரின் கண்டணப் பேரணி நடந்து இப்ப கூட்டம் தொடங்கியிருக்கு...அதை தான் சன் நியூஸில் பார்க்க சொன்னேன். அது முடியவில்லை என்பதால் யாஹூ மெசெஞ்சர் மூலம் டிவியில் அவர்கள் பேசுவதை ஒலி வடிவிலாவது கேளுங்கள் என்று வாய்ஸ் சாட்டில் என்னை இணைத்து தனது வீட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நேர்காணலை எனக்கு கேட்கும் படி செய்தார். நான் மட்டுமல்ல எனது அம்மாவும், என் கணவரும் கூட உட்கார்ந்து கேட்டோம்.

சீமான் அண்ணனின் பேச்சின் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். அதைவிட இன்று முழுவதும் என் மனதை கசியச் செய்து கொண்டிருந்தது சாமுவேல் அவர்களின் ஈழமக்களுக்கான தவிப்பு. கடந்த 2 வாரங்களாக பால் டாக்கில் எமக்காகவே ஒரு உரையாடல் அறை உருவாக்கி அங்கு பல தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஈழத்து மக்களின் உணர்வுகளையும் , அவர்கள் படும் இன்னல்களையும் விளக்கிக் கூறுகிறார். நேற்று என்னை அழைத்து எமது போராட்டம் பற்றிய மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்தார். என்னை போல் இன்னொரு ஈழத்து சகோதரர் ஒருவரையும் (லண்டனில் இருக்கிறார் அவர்)வரவைத்து அவரையும் பேச வைத்தார்.

இதையெல்லாம் ஏன் அவர் செய்ய வேண்டும்? அவரது மனைவி தாய்மை அடைந்த நிலையில் தாய் வீட்டில் பிரசவத்திற்காக போய் இருக்கும் இந்த நேரத்தில் சாமுவேலின் மனநிலை தன் குடும்பத்தின் அக்கறையையும் மீறி எமக்காக தவிப்பதை உணர்ந்து கண்கலங்கி விட்டேன்.

சங்கர் அண்ணா முத்தமிழ் குழுமத்தில் ஒவ்வொரு மடலாக எல்லோருக்கும் ஏன் எழுத வேண்டும்? அவருடைய தவிப்பின் வார்த்தை வடிவங்கள் அது...அவர் எங்களுக்காக துயரப்பட்டதன் மடல் வடிவம் அது! ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு விடியல் வராதா என்ற அவருடைய உண்மையான ஏக்கம் அது! இவரைப் போலவே சரவணா, தோழர் தியாகு, அருணாபாரதி, இன்னும் பலர்..பல்ர்....இவர்களின் கொதிப்புக்கும் , துடிப்புக்கும் என்ன காரணம்? தமிழ் என்ற ஒரு மொழியுணர்வு ! சக மனிதர்களின் கொடூரமான மரணங்களும், ப‌ரித‌வித்த‌ வாழ்கையும் , ப‌சியும், நோயும் பார்த்து கொதித்துப் போன‌ துடி துடித்த‌ ம‌னிதாபிமான‌ம் தான் கார‌ண‌ம்.

எங்கே ஒரு ம‌னித‌ன் அடிப்ப‌டை உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டு, ஒடுக்க‌ப்ப‌ட்டு , சித்திர‌வ‌தைக்குள்ளாக்க‌ப்ப‌ட்டாலும் இன்னொரு மூலையில் இருக்கும் ஒரு ம‌னித‌ன் அதை பார்த்து கிளர்ந்து எழுந்தால் அங்கே ஒரு புர‌ட்சிக்கான‌ வித்து விதைக்க‌ப்ப‌ட்டு விடுகிற‌து. ஒரு மாற்ற‌த்திற்கான‌ முய‌ற்சியாகிவிடுகிற‌து. பெரிய‌ள‌வில் பாதிப்பை மற்றவர்களிடம் ஏற்படுத்தியதோ இல்லையோ எனக்குத் தெரியாது... ச‌ங்க‌ர் அண்ணாவும், சாமுவேலும் அவர்களைப் போல் எமக்காக குரல் கொடுக்கும் குழும நண்பர்கள் என்னை மிக‌வும் பாதித்துவிட்டார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி என்ற‌ சின்ன‌ வார்த்தை போதாது. சங்கர் அண்ணாவின் மடல்களுக்கு எத்த‌னையோ பின்னூட்ட‌ங்கள்...அவற்றில் சில‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் செய்கைக‌ளைவிட‌ கொடுமையான‌வையாக‌ இருந்த‌ன‌ தான். அதே அள‌வில் அதே பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ முடியும் .. ஆனால் அதே ச‌ம‌ய‌ம் என்னை பாதித்த‌ நான் ம‌திக்கும் ச‌ங்க‌ர் அண்ணாவையும் சகோதரர் சாமுவேலையும் போன்ற‌ ஈழ‌த்து த‌மிழ‌ருக்காக‌ ப‌ரித‌விக்கும் அத்தனை ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளையும் சேர்த்து என்னுடைய பதில் நோக‌டித்துவிடும் என்ப‌தால் மௌனித்தேன்.


எல்லாவ‌ற்றுக்கும் ஒரு விடிய‌ல் வ‌ரும்! அது த‌மிழ் ஈழ‌மாக‌ ம‌ல‌ர‌ வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் விருப்பமும் வேண்டுதலும். அது தான் அந்த மண்ணில் இரத்தக ஆற்றில் ம‌ர‌ணித்த‌ ஒவ்வொரு த‌மிழ் குழந்தைகளினதும் ,ம‌க்க‌ளினதும் , போராளிக‌ளினதும், வன்புணர்வில் கற்பிழந்த எம் குலப் பெண்களின் மானத்திற்கும் அர்பணிக்க தகுதியான ஈடு.. அல்லாமல் எமது எல்லைகளுக்கு அப்பாலிருந்து யூக‌ங்க‌ளுட‌னான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கெல்லாம் செவி கொடுக்கும் முட்டாள்த‌ன‌த்தில் நாமில்லை இப்போது. எம்மின‌ ம‌க்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ நியாய‌மான‌ தீர்வு ப‌ற்றிய‌ சிந்த‌னை ம‌ட்டும் தான் எம‌க்கு இருக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ குர‌ல் கொடுக்கும் எம் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ள் அத்த‌னை பேருக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் சார்பில் என‌து ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம் இதயங்க‌ளை துளைத்து உயிர் வரை தொட்ட‌ உங்க‌ள் உண‌ர்வு பூர்வ‌மான‌ ஆத‌ர‌வுக்கு .....
ந‌ன்றி ! ந‌ன்றி!!! ந‌ன்றி!!!!!!ந‌ன்றி!!!!!!!!!!!!

No comments: